

சென்னை,
சென்னை அண்ணாநகர், தங்கம் காலனியில் எஸ்.என்.குலசேகரன் என்பவர் 1969-ம் ஆண்டு நாகூர் என்பவரிடம் இருந்து 10 சென்ட் நிலம் வாங்கினார். இந்த நிலத்தை 1980-ம் ஆண்டு சிலர் ஆக்கிரமித்தனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கீழ்க்கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 3 வழக்குகள் தொடரப்பட்டன. இதில், ராஜேஸ்வரி என்பவர் பெயரில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் எஸ்.என்.குலசேகரன் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படும் ராஜேஸ்வரி 2003-ம் ஆண்டே இறந்துவிட்டார். ஆனால், அவர் பெயரில் 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, ராஜேஸ்வரி உயிரோடு உள்ளாரா? இல்லையா? என்பதை உறுதி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், திருமங்கலம் போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டார். திருமங்கலம் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவில், ராஜேஸ்வரி தற்போது உயிரோடு இல்லை. இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் 80 வயதை கடந்தவர். 1969-ம் ஆண்டு நிலத்தை வாங்கி, அதை அனுபவிக்க முடியாமல் உள்ளார். 2003-ம் ஆண்டே இறந்துபோன ராஜேஸ்வரியின் பெயரில் 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை பெறப்பட்டுள்ளது. இந்த மோசடியை திருமங்கலம் போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.
எனவே, இறந்த ராஜேஸ்வரியின் பெயரில் வழக்கு தொடர்ந்து மோசடி செய்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, திருமங்கலம் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை 6 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், இறந்த ராஜேஸ்வரியின் பெயரில் தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், இந்த தீர்ப்பு நகலை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட்டு பதிவுத்துறை அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.