நாங்குநேரி தொகுதியில் பரபரப்பு: வசந்தகுமார் எம்.பி. திடீர் கைது சட்டவிரோதமாக ஆட்களை திரட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு

நாங்குநேரி தொகுதிக்கு வந்த வசந்தகுமார் எம்.பி.யை போலீசார் திடீரென கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்ட விரோதமாக ஆட்களை திரட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாங்குநேரி தொகுதியில் பரபரப்பு: வசந்தகுமார் எம்.பி. திடீர் கைது சட்டவிரோதமாக ஆட்களை திரட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு
Published on

நாங்குநேரி,

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவை முன்னிட்டு தொகுதியில் தங்கியுள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட வெளியூர்காரர்கள் அனைவரும் கடந்த 19-ந்தேதி மாலைக்குள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. தொகுதிக்குள் வந்து வாக்காளர்களை சந்திப்பதோ, பிரசாரம் செய்வதோ கூடாது என்றும் அறிவித்தது.

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் காரில் நேற்று நாங்குநேரி தொகுதிக்கு வந்தார். மதியம் 2.45 மணியளவில் நாங்குநேரி அருகே உள்ள கலுங்கடி பகுதியில் வந்தபோது, அவரை திடீரென போலீசார் தடுத்து நிறுத்தி நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜான் கேபிரியேல் கொடுத்த புகாரின் பேரில், வசந்தகுமார் எம்.பி.யை போலீசார் கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோதமாக ஆட்களை திரட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் வசந்தகுமார் எம்.பி.யுடன் வந்த அருள், சீனி மற்றும் ராஜகோபால், அப்பாஸ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு மாலை 5.45 மணியளவில் வசந்தகுமார் எம்.பி.யை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்தபோது, அங்கு திரண்டிருந்த காங்கிரசார், தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பின்னர் வசந்தகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் பாளையங்கோட்டையில் இருந்து எனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு நாங்குநேரி வழியாக காரில் சென்று கொண்டிருந்தேன். கலுங்கடி பகுதியில் வந்தபோது போலீசார் எனது காரை நிறுத்தி என்னை அழைத்து சென்றனர். என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினர். ஜனநாயக நாட்டில் ஒரு எம்.பி. ரோட்டில் செல்லக்கூடாதா? என்னை போலீசார் கைது செய்தது சட்டவிரோதமானது. நான் வாக்குச்சாவடிக்குள் சென்று இருந்தால் என்னை கைது செய்து இருக்கலாம். பணம் வினியோகம் செய்ததாக என் மீது பொய் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அந்த வழக்கை சட்டப்படி நாங்கள் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com