உதித்சூர்யா கைதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை ‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட முறைகேட்டில் மாணவி, 2 மாணவர்கள் சிக்கினர்

நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்ட முறைகேட்டில், உதித் சூர்யாவை தொடர்ந்து ஒரு மாணவி உள்பட 3 மாணவர்கள் சிக்கி உள்ளனர்.
உதித்சூர்யா கைதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை ‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட முறைகேட்டில் மாணவி, 2 மாணவர்கள் சிக்கினர்
Published on

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வரும் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா (வயது 20). இவர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் இவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த விவரம் வெளியானது.

இதுகுறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், உதித்சூர்யா மீது க.விலக்கு போலீசார் கடந்த 18-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். உதித்சூர்யா தனது குடும்பத்துடன் தலைமறைவானதால் அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், திருப்பதி மலையடிவாரத்தில் உதித்சூர்யாவை குடும்பத்துடன் தனிப்படையினர் மடக்கிப் பிடித்து தேனிக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து உதித்சூர்யாவை நேற்று முன்தினம் கைது செய்தார். உதித்சூர்யா கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டார்.

போலீசாரிடம் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் கமிஷன் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.

கைதான உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மேலும் 5 பேர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

இதனால் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முதல் மாணவர் சேர்க்கை வரை பல்வேறு கட்டங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சென்னையில் நேற்று ஒரு மாணவி உள்பட 3 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்கள்.

அவர்களில் ஒருவர் பெயர் பிரவீண். இவர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.

மற்றொரு மாணவரின் பெயர் ராகுல். இவர் பாலாஜி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.

பிடிபட்ட மாணவியின் பெயர் அபிராமி. இவர் சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள சத்ய சாய் மருத்துவ கல்லூரி மாணவி ஆவார்.
இவர்கள் மூவரும் சென் னையைச் சேர்ந்தவர்கள்.

பிடிபட்ட 3 பேரையும், நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் நீண்ட நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின் போது, இவர்களுக்காக உத்தரபிரதேசத்திலும், டெல்லியிலும் வேறு நபர்கள் நீட் தேர்வு எழுதியதையும், இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியதையும் 3 பேரும் ஒப்புக்கொண்டதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் தொடர்பான பிரதான வழக்கு தேனியில் நடைபெற்று வருவதால், மேல் விசாரணைக்காக மாணவர்கள் பிரவீண், ராகுல், மாணவி அபிராமி ஆகிய மூவரையும் இன்று (சனிக்கிழமை) தேனிக்கு கொண்டு செல்கிறார்கள்.

இதற்கிடையே, உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத இடைத்தரகராக செயல்பட்ட நபரை தேடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேரளா சென்றனர்.

உதித்சூர்யாவுக்கு பதிலாக மற்றொருவர் நீட் தேர்வு எழுதிய சம்பவம் மும்பையில் உள்ள தேர்வு மையத்தில் நடந்துள்ளது. எனவே தேர்வு எழுதியவர் மும்பையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் உதித்சூர்யா மும்பையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. எனவே தேர்வு எழுதிய நபரை தேடி மும்பைக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் சிலர் சென்று உள்ளனர்.

இதற்கிடையே, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இடைத்தரகர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் நேற்று கைதானதாகவும், அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேனிக்கு கொண்டு வர இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கேட்டபோது, இதுவரை அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்றும், இடைத்தரகர் கேரளாவைச் சேர்ந்தவர் என்ற தகவலின் பேரில் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும், இந்த வழக்கில் இன்னும் நிறைய பேரிடம் விசாரணை நடத்த வேண்டியது உள்ளது என்றும் கூறினார்.

நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீட் தேர்வின் போது பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், ஹால் டிக்கெட் வழங்கும் போதும், கலந்தாய்வு, மாணவர் சேர்க்கையின் போதும் ஆள்மாறாட்டத்தை கவனிக்காமல் விட்டது எப்படி? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட இருக்கிறது. ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித்சூர்யா மற்றும் சந்தேகத்துக்கு உள்ளான சில மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தியவர்கள் யார்? மாணவர் சேர்க்கை நடத்தியது யார்? என்பது போன்ற விவரங்களை கேட்டு அறிய இருக்கிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com