

சென்னை,
இதுகுறித்து தமிழக அரசின் மின் ஆய்வுத்துறை தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருகிற பருவமழை காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருட்சேதம் ஏற்படுவது மட்டுமின்றி மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பும் ஏற்படக்கூடும். இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் விழிப்புணர்வு கொள்வது அவசியம்.
அந்தவகையில் தமிழக அரசு மின் ஆய்வுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-
* மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்தக்காரர் மூலம் மட்டுமே செய்யுங்கள்.
* ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டும் பயன்படுத்துங்கள்.
* மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்து விடுங்கள்.
* பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய 3 பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.
* 30 எம்.ஏ. ஈ.எல்.சி.பி. அல்லது ஆர்.சி.சி.பி-ஐ (மின் கசிவு தடுப்பான்) வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம்.
* உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்காதீர்கள்.
* கேபிள் டி.வி வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.
* ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.
* சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமையுங்கள்.
* 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் வயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள்.
* மின்சார கம்பத்துக்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் மீதோ அல்லது மின் கம்பத்தின் மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள்.
* மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.
* மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.
* மழை, காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள். இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுங்கள்.
* மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.
* மின் வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அதிகாரிகளை அணுக வேண்டும்.
* அவசர நேரங்களில் மின்இணைப்பை துண்டிக்கும் வகையில் மின்கருவிகளின் சுவிட்சுகள் அமைந்திருக்க வேண்டும்.
* மின்சார தீ விபத்துக்கான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்த வேண்டும். உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர் ரசாயன பொடி (டி.சி.பி.) அல்லது கரியமில வாயு ஆகியவற்றை பயன்படுத்தலாம். தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.
* மின்சார பெட்டி (பில்லர் பாக்ஸ்) அருகில், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்ல வேண்டாம். மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் அளிக்கவேண்டும்.
* இடி அல்லது மின்னலின்போது வெட்டவெளியில் இருக்க வேண்டும். உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையுங்கள். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ நிற்காதீர்கள். தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில், மின் கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிளை தேர்ந்தெடுங்கள். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு சென்று விடுங்கள்.
* இடி அல்லது மின்னல் ஏற்படும்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.