தூத்துக்குடியில், 2 சவர்மா கடைகள் மூடப்பட்டன

தூத்துக்குடியில், 2 சவர்மா கடைகள் மூடப்பட்டன.
தூத்துக்குடியில், 2 சவர்மா கடைகள் மூடப்பட்டன
Published on

தூத்துக்குடியில் பொய்யான தகவல் கொடுத்து சான்றிதழ் பெற்ற 2 சவர்மா கடைகள் மூடப்பட்டன. புரோட்டா கடை செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.

ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவர்மா உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார், சக்திமுருகன், காளிமுத்து மற்றும் ஜோதிபாசு ஆகியோர் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் 16 சவர்மா கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது காலாவதி தேதி இல்லாத 11 கிலோ சவர்மா ரொட்டிகளும், தரமற்ற 3 கிலோ சிக்கனும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், 10 கிலோ தப்புக்குறியீடான மசாலா மற்றும் சுகாதாரமற்ற வகையில் இருந்த மசாலாவும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

2 கடைகள் மூடல்

தொடர்ந்து காலாவதி தேதி இல்லாத சவர்மா ரொட்டி தயாரித்த நிறுவனமும் ஆய்வு செய்யப்பட்டு, லேபிள் இல்லாத 4 கிலோ ரொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்புத் துறைக்குத் தவறான தகவல் வழங்கி, உரிமத்துக்கு பதிலாக, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்ற 2 சவர்மா கடைகளுக்கு நிறுத்த அறிவிப்பு சார்பு செய்யப்பட்டு, அவை மூடப்பட்டன. ஒரு புரோட்டாக் கடையை ஆய்வு செய்ததில், அதன் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியாகியிருந்தது கண்டறியப்பட்டு, அதன் இயக்கத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் ஏதேனும் சம்பவம் நடந்தால் மட்டும் சோதனை நடத்துவதே அதிகாரிகளின் வாடிக்கையாக உள்ளது. ஆகையால் அதிகாரிகள் முறையாக தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com