

திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி. அவர் வீட்டில் குளித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (30) மற்றும் விக்னேஷ் (26) ஆகிய இரு இளைஞர்கள் மறைந்திருந்து, தங்களது செல்போன் மூலம் மாணவியை புகைப்படம் எடுத்துள்ளனர்.
தன்னை யாரோ புகைப்படம் எடுப்பதை கவனித்த அந்த மாணவி உடனடியாக அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வருவதற்குள், அந்த இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பதால், காவல்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தீவிரப்படுத்தினர். குற்றம் சாட்டப்பட்ட இருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.