

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் 2 பேர் நேற்று முன்தினம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். ராஜாஜி பூங்கா முன்பு சென்ற போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாக சென்றனர். அப்போது பின்னால் ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்தவர்கள் தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்து, சகோதரிகளை சத்தம் போட்டனர். பின்னர் பழைய பஸ் நிலையம் அருகே வைத்து மொபட்டை வழிமறித்து, காரில் இருந்து இறங்கி சகோதரிகளை தாக்கிவிட்டு செல்போனை சேதப்படுத்தியதாகவும், மொபட் சாவியையும் பறித்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.