தடைசெய்யப்பட்ட கள் அருந்திய விவகாரம்: தூத்துக்குடி தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தலைமை காவலர் முருகன், தனது நண்பர்களோடு சேர்ந்து கள் அருந்தியதாக தெரிகிறது.
தலைமை காவலர் முருகன்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவர், நெல்லை மாவட்டம் மூலைகரைப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். தமிழ்நாட்டில் சட்டப்படி தடைசெய்யப்பட்ட 'கள்' மதுபானத்தை, முருகன் தனது நண்பர்களுடன் இணைந்து அருந்துவது போன்ற பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவியது.

கள் பானத்திற்கு தடை

தமிழகத்தில் கள் பானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி கள் அருந்துபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தடையை நீக்க கோரியும், தமிழகத்திலும் கள்ளுக்கடைகளை திறக்க கோரியும் பனை விவசாயிகள் தொடர்ந்து வலியுருத்தி வருகின்றனர்.

கள் அருந்தும் புகைப்படம்

இந்நிலையில், தலைமை காவலர் முருகன், தனது நண்பர்களோடு சேர்ந்து கள் அருந்தியதாக தெரிகிறது. 5 லிட்டர் கேனில் அவர் 'கள்' அருந்தும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, நெல்லை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

ஆயுதப்படைக்கு மாற்றம்

முதற்கட்ட ஒழுங்கு நடவடிக்கையாக, தலைமை காவலர் முருகனை உடனடியாக நெல்லை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com