

திருச்சி,
கடந்த 23ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் 68 வயது மூதாட்டியை எலி கடித்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை அருகில் உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி தமிழ்க்கொடி (வயது 68). நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் படுத்திருந்தபோது கட்டிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து குடும்பத்தினர் தமிழ்க்கொடியை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் எலும்பு முறிவிற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததாலும், சளி பிரச்சினை காரணமாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை.
இதையடுத்து கடந்த 21-ம் தேதி தான் எலும்பு முறிவை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும் தமிழ்க் கொடி சிகிச்சைக்கு பிந்தைய கண்காணிப்பு வார்டிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சையில் இருந்து வந்தார். தமிழ்க்கொடியின் மகன்கள் இருவரும் இரவு, பகல் என மாறி மாறி உடனிருந்து அவருக்கு உதவி செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந் த 23-ம் தேதி அன்று அதிகாலை 5 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்க்கொடியின் கால் பெருவிரலை எலி கடித்துக்கொண்டிருந்ததையும், விரலில் இருந்து ரத்தம் வழிந்ததையும் அவரது இளைய மகன் விஜயகுமார் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக எலியை அவர் விரட்டியுள்ளார். ஆனாலும் ரத்தம் தொடர்ந்து வழிந்து கொண்டே இருந்ததால் இதுபற்றி உடனடியாக அந்த வார்டில் இருந்த நர்சிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்து, தமிழ்க்கொடியை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி உள்ளனர். தற்போது அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்க்கொடி கால் பெருவிரலின் பெரும்பகுதியை எலி கடித்துக்குதறிய வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் 68 வயது மூதாட்டியை எலி கடித்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பான விளக்கத்தில், “சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததால் மூதாட்டிக்கு காலில் உணர்வு இல்லை, மூதாட்டி தற்போது நலமுடன் உள்ளார். மூதாட்டியின் விரல்கள் நல்ல இயக்கத்தில் உள்ளது. பழமையான கட்டிடம் என்பதால் மீண்டும் மீண்டும் எலி வளைகள் உருவானது. கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட திட்டம் உள்ளது. மாதாந்திர எலி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.