சென்னையில் 35 இடங்களில் வருமானவரி சோதனை; ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னையில் 35 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் 2 நிதி நிறுவனங்கள் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்ததுடன், கணக்கில் காட்டாத ரூ.9 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் 35 இடங்களில் வருமானவரி சோதனை; ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
Published on

வருமானவரித்துறை சோதனை

சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் நிதி நிறுவனம் நடத்துவோரிடம் ஹவாலா பணப் புழக்கம் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.அந்த புகார்களின் அடிப்படையில், சென்னையில் புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை, வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வருபவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடையவர்களின் 35 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் கடந்த 23-ந்தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆவணங்கள் வருமானவரி துறையிடம் சிக்கி உள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள வருமானவரித்துறை கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிதி நிறுவனங்கள்

சென்னையில் இயங்கி வரும் 2 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னையிலுள்ள 35 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் அந்த 2 நிதி நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களிடம் கொடுக்கப்பட்ட வரையறையைத் தாண்டி பெறும் வட்டிப் பணத்தின் மூலம் சுமார் ரூ.300 கோடி கணக்கில் காட்டப்படாத வருவாயை ஈட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைத் தாண்டி வெவ்வேறு பெயர்களின் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அதில் வாடிக்கையாளர்களை வட்டி செலுத்த வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இரு நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com