வருமான வரி சோதனைகளால் தி.மு.க.வை அச்சுறுத்த முடியாது; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

வருமான வரி சோதனைகளால் தி.மு.க.வை அச்சுறுத்த முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வருமான வரி சோதனைகளால் தி.மு.க.வை அச்சுறுத்த முடியாது; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
Published on

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சிறப்பாக செயல்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கினார்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அச்சுறுத்த முடியாது

வருமான வரி சோதனை என்பது எப்போதும் நடக்கும் ஒன்று தான். ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போன்று தான், இப்போதும் நடக்கிறது. இதுபோன்ற சோதனைகளால் தி.மு.க.வை அச்சுறுத்த முடியாது. இதுவரையிலும் நடந்த சோதனைகளில் யார் மீதாவது வழக்கு போடப்பட்டுள்ளதா? யாரையாவது கைது செய்துள்ளார்களா? ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளார்களா? யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லையே. என் மீது எப்.ஐ.ஆர். போட்டிருக்கிறார்களா? இல்லையே. தி.மு.க.வை யாரும் வாழ்த்துவதில்லை. ஆனால் அவ்வப்போது குற்றச்சாட்டு தான் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், எங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வகுப்பு எடுப்பது போல் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம், கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை பாதியில் நிறுத்தியதைப்பற்றி கேளுங்கள். அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவை பற்றி கேட்கிறீர்கள். அவர் பேசியதாகவே பல ஆடியோக்கள் வெளிவந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com