கோவை, ஈரோடு, நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை

வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் தொடங்கி தனியார் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
கோவை, ஈரோடு, நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை
Published on

கோவை,

தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் தொடங்கி தனியார் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

அதன்படி கோவை காளப்பட்டி பகுதியில் சதாசிவம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடத்தி வரும் கட்டுமான நிறுவனம், பட்டணம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ராமநாதன் வீடு உள்பட 7 இடங்களிலும், நாமக்கல்லிலும் அரசு ஒப்பந்ததாரரான சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் அவருடைய வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதேபோல ஈரோடு பெரியார்நகர், ராஜாகாடு கருப்பண்ண வீதி, சக்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேற்கண்ட இடங்களில் நேற்று 2-வது நாளாக இந்த சோதனை நீடித்தது. இதையொட்டி துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com