

ஹலோ எப்.எம். வானொலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் தேரணிராஜன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரிக்க, மக்களிடம் ஏற்பட்டுள்ள அலட்சிய போக்கே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அதிக அளவிலான பொது நிகழ்ச்சிகள், போக்குவரத்தில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காமை மற்றும் முக கவசம் அணியாமல் வெளியில் நடமாடுவது போன்றவை முக்கிய காரணிகளாகும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுவாக வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலை தீவிரமாக இருக்க அது உருமாறி இருப்பதும் ஒரு காரணம் என்றும், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த விகிதம் குறைவாக இருக்க அங்கு நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்றாவது அலை வருமா? என்பது குறித்து கேட்டபோது, இப்போதே முடிவு செய்ய முடியாது என்றும், மூன்றாவது அலை இருக்கும் பட்சத்தில் இந்தளவு வீரியமாக இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர கொரோனாவுக்காக முழு ஊரடங்கு அறிவிப்பது சரியான நடைமுறையா?, கொரோனா பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும், இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் தரமானதுதானா? உள்ளிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரின் பல்வேறு கேள்விகளுக்கு டாக்டர் தேரணிராஜன் தெளிவாக பதில் அளித்துள்ளார்.