

சென்னை,
அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்களை அதிகரித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவாக, மாநிலத்தின் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் அதிகளவில் பதக்கங்களை வென்று குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களின் உயர்கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்றாக, கல்லூரிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் அமைகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 1994-1995 கல்வியாண்டில், தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் MBBS மற்றும் BDS பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்காக விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் முதற்கட்டமாக 3 இடங்கள் வழங்கப்பட்டன. இதன் முக்கிய நோக்கம், திறமையான விளையாட்டு வீரர்கள் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து பயிலும் வகையில் அவர்களை ஊக்குவிப்பதாகும்.
பின்னர், மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்ததை கருத்தில் கொண்டு, 01.06.2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணை நிலை எண்.376, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை (MCA–1) ஆணையின்படி, விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 3-லிருந்து 8 ஆக உயர்த்தப்பட்டது. அதில் MBBS பாடப்பிரிவிற்கு 7 இடங்களும், BDS பாடப்பிரிவிற்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டு, 2018–2019 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவாக, மாநிலத்தின் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் அதிகளவில் பதக்கங்களை வென்று குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி வழங்கிட வேண்டுமென விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் அறிவுரைக்கிணங்க, துணை முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற 47-வது செயற்குழு கூட்டத்தில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரி சேர்க்கைக்கான இடங்களை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரி சேர்க்கைக்கான இடங்களை உடனடியாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதுடன், இதற்கான முன்மொழிவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது அரசாணை நிலை எண்.92, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை (MCA-1), நாள்.10.03.2026-ன் படி தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்புக்கான இடங்கள் 7-லிருந்து 13-ஆகவும் BDS படிப்புக்கான இடங்கள் 1-லிருந்து 2-ஆகவும் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்களை அதிகரித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.