

சென்னை,
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பை கருதி இன்று காலை 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக தற்போது அதிகரித்து உள்ளது.
உபரி நீர் வடிந்து செல்லும் ஆற்றங்கரையில் உள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.