ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு; குளிக்க, பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல் அருவியில் வினாடிக்கு 18,000 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது.
ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு; குளிக்க, பரிசல் இயக்க தடை
Published on

தர்மபுரி

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில், சுற்றுலாவாசிகள் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடும்.

சுற்றுலா பயணிகள்

அப்போது இங்குள்ள மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகள், காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்வர். மேலும் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசலில் சென்று காவிரியின் அழகை கண்டு ரசிப்பர்.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாமல் பொய்த்ததில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அடியோடு குறைந்தது. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது. மேலும் கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட மறுத்தது. இதனால் நீர்வரத்து முற்றிலும் சரிந்தது.

பரிசல் ஓட்டிகள்

குறிப்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதி முழுவதும் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நீர் நிரம்பி இருந்த நிலை மறைந்து தற்போது வெறும் பாறைகளாக மட்டுமே காட்சியளித்தது. ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக வறண்டன. இதனால் சுற்றுலாவை நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இந்த சூழலில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. தற்போது குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கபினி அணையும் நிரம்பி வருகிறது.

காவிரியில் உபரிநீர்

இதனால், கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அது ஒகேனக்கல் வழியே தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது. இதனால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, ஒகேனக்கல் அருவியில் வினாடிக்கு 18,000 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. இதனால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. 2-வது நாளாக இந்த தடை இன்றும் நீடிக்கிறது. இதேபோன்று, அருவியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com