குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு

கண்டமனூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு
Published on

கண்டமனூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு குன்னூர் வைகை ஆறு மற்றும் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கண்டமனூர் கிராமத்தில் 6 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கண்டமனூர் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த கிராமத்தில் தற்போது 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தெருக்குழாய்களில் கூட்டம் கூட்டமாக நின்று முண்டியடித்து கொண்டு பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இன்னும் சிலர் வேறு கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதேபோல ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்களும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

குடிநீர் பற்றாக்குறையை போக்க ஊராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஆற்றில் உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் ஆழ்துளை கிணறுகள் இல்லாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை' என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com