

சென்னை:
நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் சார்பில் முதல் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் விஜய், இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்த விஜய்க்கு காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் கோட்டைக்கு வந்தார். கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட விஜய், பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.இதையடுத்து சரியாக காலை 8.45 மணிக்கு கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல் அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
இந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், நடிகை திரிஷாவும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஜய்யின் பெற்றோர் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகிலேயே த்ரிஷாவுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதாவது முதல் வரிசையில் திரிஷா அமரவைக்கப்பட்டு இருந்தார்.
காவல்துறையினரின் அணிவகுப்பை விஜய் பார்வையிட்டபோது, அவர் சல்யூட் அடித்தார். அப்போது திரிஷாவும் முதல்வர் விஜய்யை பார்த்து சல்யூட் அடித்தார். விழா நிறைவடைந்து முதல்வர் விஜய் புறப்பட்டுச் சென்றபோது, அவரது பெற்றோர் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் கையசைத்து அவரை வழியனுப்பி வைத்தனர். சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.