

தூத்துக்குடி,
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், தேசிய மரியாதையைச் செலுத்தும் விதமாகவும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இயங்கும் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகப் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
துறைமுக வளாகத்திலும் படகுகளிலும் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இன்று ஒருநாள் விடுமுறைக்குப்பின், நாளை (ஆகஸ்ட் 16) வழக்கம்போல் விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லும் என மீன்பிடி துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.