சுயேச்சை கவுன்சிலர் உண்ணாவிரதம்

அம்பையில் சுயேச்சை கவுன்சிலர் உண்ணாவிரதம் இருந்தார்.
சுயேச்சை கவுன்சிலர் உண்ணாவிரதம்
Published on

அம்பை:

அம்பை நகராட்சி 8-வது வார்டு சுயேச்சை கவுன்சிலராக சித்ராதேவி (வயது 30) உள்ளார். இவர் தனது வார்டு பகுதியில் ரேஷன் கடை அமைத்தல், சமுதாய நலக்கூடம் அமைத்தல், இப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல், புதிதாக சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சியில் பலமுறை கோரிக்கை மற்றும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அம்பை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு கடந்த மாதம் 19-ந் தேதி அம்பை போலீசில் அனுமதிகோரி மனு அளித்தார். அதற்கு 22-ந் தேதி அனுமதி மறுக்கப்பட்டு காவல்துறையிலிருந்து கடிதம் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து கவுன்சிலர் சித்ராதேவி, உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், சுயேச்சை கவுன்சிலர் அறவழியில் போராட அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்று காலை அவரது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் சிறிய பந்தல் அமைத்து தனியாக உண்ணாவிரதம் இருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com