

காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. கவுன்சிலர்கள், தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி கூட்டரங்குகளில் தற்போதைய முதல்-அமைச்சர் விஜய் படத்துடன் முன்னாள் முதல்-அமைச்சர்கள் படங்களும் வைக்கப்பட்டு உள்ளதாக கூறி முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை அரங்கில் வைக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.
இதேபோல் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்களையும் வைக்க வேண்டும் என கூறி இருவரது படங்களையும் வைத்தனர். இதைபார்த்த தி.மு.க.வை சேர்ந்த துணை மேயர் குணசேகரன், அக்கட்சி கவுன்சிலர்கள் இணைந்து, முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்தனர். எனவே ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், விஜய் படங்கள் இருந்தன.
இதைபார்த்த அங்கிருந்த 11-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் மெய்யர், திடீரென கூட்டரங்கில் எழுந்து நின்று நடிகை திரிஷா படத்தையும் இந்த படங்களுடன் மாட்ட வேண்டும். நடிகை திரிஷாவால்தான் கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திரிஷா படத்தை வைக்காவிட்டால் வன்முறை வரும் என கூறியதால் அங்கிருந்தவர்களிடம் சிரிப்பலை ஏற்பட்டது.
மேலும் அந்த கவுன்சிலர் திரிஷா படத்தை மாட்டுவதற்கு இங்கு இடம் இல்லை. எனவே அவர் படத்தை மாட்டுவதற்கு இடத்தை ஒதுக்க வேண்டும் எனக்கூறி மீண்டும் கூச்சலிட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது.