எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரை இந்தியா என்றைக்கும் நிச்சயம் மறக்காது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்


எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரை இந்தியா என்றைக்கும் நிச்சயம் மறக்காது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்
x

2050-ம் ஆண்டுக்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு அதனை நிறைவேற்ற தமிழ்நாடு முயற்சி செய்கிறது என பேசியுள்ளார்.

சென்னை,

சென்னை, தரமணி, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

அப்போது அவர், வரலாற்றில் ஒரு சிலர்தான் பல கோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி ஒருவராக விளங்கி கொண்டிருக்க கூடியவர் எம்.எஸ். சுவாமிநாதன். அவர்களுடைய நூற்றாண்டு விழாவில், கலந்து கொண்டு உரையாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக என் நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

நாட்டின் பெரும்பாலான மக்கள், பட்டினியால் காய்ந்தும் - கால் வயிறும் - அரை வயிறும் சாப்பிட்டு தவித்த காலத்தில், மக்களின் வயிறு நிறைய, மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரை இந்தியா என்றைக்கும் நிச்சயம் மறக்காது! கலைஞரோடு நெருக்கமான நட்பு கொண்டவர் அவர். பலமுறை அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது. மிக எளிமையாக பழகக்கூடியவர்!

கடைக்கோடி கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு விவசாயியிடம் அதே எளிமையுடன், மரியாதையுடன் பேசக்கூடியவர்! “இந்திய பசுமை புரட்சியின் தந்தை” என்று உலகமே அவரை அழைத்தாலும், நமக்கு அவர், உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றோரின் குரலாகவும், எளிமையின் உருவமாகவும் அவர் இருந்தார். தான் கொண்ட அறிவை, தான் கற்ற அறிவியலை, மக்களின் பசியை போக்குவதற்கு பயன்படுத்திய, தொலைநோக்கு சிந்தனையாளர்!

இன்றைக்கு உலகமே பேசக்கூடிய அளவுக்கு, காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பேசியிருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும், 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால் நாடு இருந்த நிலைமை தெரிய வாய்ப்பில்லை!

விடுதலைக்கு பிறகு, இந்தியாவை கட்டமைத்து கொண்டிருந்த காலம் அது! மக்களின் உணவு தேவை அவ்வளவு எளிதாக பூர்த்தி அடையவில்லை. பசியால் பலர் இறந்தனர்! அந்த நிலைமையெல்லாம், இன்றைக்கு மாறியிருக்கிறது என்றால், அதற்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னெடுத்த “பசுமை புரட்சி”தான் முக்கிய காரணம்!

அதுமட்டுமல்ல, இந்த வளர்ச்சியுடன் வந்த விளைவுகளை பற்றியும், ஓர் அறிவியலாளராக எடுத்து சொல்லி அவர் கவலைப்பட்டார். ரசாயன உரங்களின் நச்சுத்தன்மையால் நிலம் எப்படி பாழாகிறது என்றெல்லாம் தெளிவாக எடுத்து சொல்லி, வயிறு நிரம்பினால் மட்டும் போதாது, நாம் வழங்குகின்ற உணவு சத்தான மற்றும் நிலையானதாவும் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

இங்கே பல அறிவியலாளர்களும், அவருடைய ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்தவங்களும் இருக்கிறீர்கள். அவருடைய கனவுகளை நனவாக்குகின்ற பணிகளில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும். சத்தான, அதேசமயம் பெரும் மக்கள் தொகையின் தேவையை தீர்க்கும் ஆற்றலுள்ள பயிர்களை கண்டறிய நீங்கள் எல்லாம் பாடுபடவேண்டும்!

வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் உழவர்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியையும் நாம் செய்தாக வேண்டும்!

இதற்கெல்லாம் அடித்தளமாகதான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு வருகிறோம். அதுவும், இந்த ஆண்டு வேளாண்மை பட்ஜெட்டில், வேளாண்மையில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும் என்று அறிவித்து, அதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது!

மத்திய அரசு இந்திய அளவில், 2070-க்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு இருக்கக்கூடிய இந்த நிலையில், தமிழ்நாடு 2050-ம் ஆண்டுக்குள் அதனை நிறைவேற்ற முயற்சி செய்கிறது என்றார்.

இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைத்த ஆளுமைகளில் ஒருவரான எம்.எஸ்.சுவாமிநாதனை பெருமைப்படுத்தும் வகையில், நம்முடைய திராவிட மாடல் அரசில், போரூர் ஈரநில பசுமை பூங்காவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரை சூட்டி திறந்து வைத்திருக்கிறோம். மேலும், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் இருக்கின்ற வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ‘டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில், ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம்.

கடந்த ஆகஸ்டு மாதம், டெல்லியில் நடைபெற்ற 'பாரத ரத்னா'எம். எஸ். சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாநாட்டில், தமிழ்நாடு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு, சுவாமிநாதன் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்.

உழவர்களின் நலனை பாதுகாத்து, சிறப்பான எதிர்காலத்தையும் உருவாக்குகின்ற நம்முடைய பணிகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்வும், தொண்டும் நமக்கு என்றென்றும் வழிகாட்டும்! என்று பேசியுள்ளார்.

1 More update

Next Story