

சென்னை,
மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது - மு.வீரபாண்டியன் கண்டனம். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
சென்னை, சைதாப்பேட்டை தொகுதி, மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில் நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாடகை செலுத்தி வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 குடும்பங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள், அவர்களின் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டுமென மிரட்டப்படுகிறார்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.
அவர்களின் வசிப்பிடத்தை வேறு சில தனியார் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சிலரும், அதிகாரிகளும், தனிநபர்களும் இணைந்து அவர்களை மிரட்டுகிறார்கள் என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
தனது வீட்டுக்கு எதிரே ஏழை எளிய மக்களின் குடியிருப்புகள் இருப்பதை விரும்பாத ஒரு நபர், அக்குடியிருப்புகளை அகற்ற பொது நல வழக்கை போட்டுள்ளார் என்றும் ஏழை மக்களின் குடியிருப்புகள் உள்ள இடத்தை அபகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் பாதிக்கப்பட்டுள்ளோர் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை காவல்துறை அந்த குடியிருப்பு பகுதியில் குவிக்கப்பட்டது.
ஏழை, எளிய மக்களின் குடியிருப்பை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை பொதுமக்கள் நாடினர். நீதிமன்றத்தில் தனிநபருக்கு ஆதரவாக அறநிலைய துறையில் உள்ள அதிகாரிகளில் சிலர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசுக்கு சொந்தமான கோவில் நிலத்தில் வாடகை செலுத்தி நீண்ட காலமாக வசிக்கும் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும், அம்மக்களின் வசிப்பிட உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து இன்று போராடியது.
போராட்டம் நடத்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் அபிஷேக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ர.சௌமியா, துணைத் தலைவர் கமலக்கண்ணன் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் காவல்துறையும், இந்து அறநிலையத் துறையும், 20 குடும்பங்களை சேர்ந்தவர்களின் பொருட்களை எடுத்து சாலையில் வீசிவிட்டன. கைக்குழந்தைகளுடன் உள்ள ஏழை, எளிய மக்களையும் வீட்டுக்குள் புகுந்து வெளியேற்றிவிட்டு, வீடுகளுக்கு சீல் வைத்துள்ளன. தமிழக அரசின் காவல்துறை மற்றும் இந்து அறநிலையத் துறையின் இத்தகைய ஏழை, அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும். கோவில் மனைகளில் குடியிருக்கும் அந்த 20 குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளை பாதுகாத்திட முன்வர வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.