இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோப்புப்படம்
நல்லகண்ணுவுக்கு சிறுநீரகத்தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101) கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதில் அவருக்கு வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியாததால் குழாய் மூலம் நேரடியாக வயிற்றுக்கு உணவு செல்லும்படியாக குழாய் அமைக்கப்பட்டது. பின்னர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
தவறி விழுந்ததில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரல் பிரச்சினை இருப்பதால் சுவாசிக்க உதவியாக தொண்டையில் ‘டிரக்யாஸ்டமி' குழாய் பொருத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சனிக்கிழமை அவர் மீண்டும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






