

சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சாதனை படைத்துள்ள இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதுநாள் வரை, ஜூனியர் உலகக் கோப்பையை எந்த அணியும் 3 முறைக்கு மேல் வென்றதில்லை. நியூசிலாந்தில் உள்ள மவுன்ட் மவுங்கனுயி நகரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மகத்தான வெற்றிபெற்று, இந்திய அணி 4-வது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இத்தகைய மாபெரும் சாதனையை நிகழ்த்தி நாட்டிற்கும், கிரிக்கெட் விளையாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள கேப்டன் பிரித்வி ஷா தலைமையிலான கிரிக்கெட் அணிக்கும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ள மன்ஜோத் கல்ராவுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.