இந்தியாவின் மிக உயரிய விருது: அபிநந்தனுக்கு ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்க வேண்டும் பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

இந்தியாவின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது, அபிநந்தனுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் மிக உயரிய விருது: அபிநந்தனுக்கு ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்க வேண்டும் பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
Published on

சென்னை,

இந்தியாவின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது, அபிநந்தனுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தற்கொலை தாக்குதல்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த பிப்ரவரி 14-ந் தேதி பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வீரமிக்க 40 வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடியாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பாகிஸ்தானில் உள்ள பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

பிரதமர் நடவடிக்கை

நமது வான் பக்தியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானத்தை, இந்திய விமானப்படையின் போர் விமானம் மிக் 21 பைசன் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் செலுத்தினார். அவர் பாகிஸ்தான் ஆயுதப்படையினால் பிடிக்கப்பட்டார்.

பிரதமரால் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர நடவடிக்கையாலும், சர்வதேச அளவில் எழுந்த கடுமையான நிர்ப்பந்தங்களாலும் 1-ந் தேதியன்று அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது.

பரம் வீர் சக்ரா

அபிநந்தன் வியக்கத்தக்க வகையில் வீழ்ந்துவிடாமல் நிமிர்ந்து நின்றார். மோசமான சூழ்நிலைகளிலும் முகத்தில் மிகுந்த நம்பிக்கையையும், உறுதியையும் காட்டினார். இதனால் நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

எளிதில் பின்பற்ற முடியாத தைரியமான இந்த வீரதீர செயல்பாட்டுக்காக, அபிநந்தன் வர்த்தமானுக்கு, தேசத்தின் மிக உயர்ந்த விருதான பரம் வீர் சக்ரா விருதை வழங்கும்படி மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com