தனிநபர், சிறுதொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர், சிறுதொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தனிநபர், சிறுதொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
Published on

திருப்பத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பத்துடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com