

சென்னை,
கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தால் இறப்புச் சான்றிதழில் கொரோனா உயிரிழப்பு என சான்றளிக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது இறப்புச் சான்றிதழில் கொரோனா நோய்தொற்றினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு சான்றளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் கொரோனா நோயினால் பெற்றோரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு, அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் சரியான முறையில் சென்றடைவதையும், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.