

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன. இந்த கடல் முள்ளெலிகளில் இருக்கும் சிறிய, கூர்மையான முட்கள் கடலில் புனித நீராடும் பக்தர்கள் மீது குத்தி அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், கடலில் நீராட வரும் பக்தர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடற்கரையில் ஒதுங்கும் முள்ளெலிகளை நீக்குவது என கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரையோரம் கரையொதுங்கும் முள்ளெலிகளை பாதுகாப்பாக அகற்றி பக்தர்கள் நீராட வசதியான சூழலை ஏற்படுத்தி வருகின்றனர்.