

திங்கள்சந்தை:
குருந்தங்கோடு அருகே தனியார் கம்பெனியில் கொதிகலன் தண்ணீர் சிந்தி சிதறியதில் காயமடைந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கொதிநீர் கொட்டியதில்...
குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைகுழி பகுதியில் வலை கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.
அதன்படி ஜார்கண்ட் மாநிலம் பஞ்ச்கதியபஜார் ரக்சி பகுதியை சேர்ந்தவர் ரபிக்முபின் (வயது 34), அவருடைய சகோதரர் மபிஜீதின் முமின் (31) ஆகிய 2 பேரும் வலை கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் ரபிக்முபின் கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொதிகலனின் மூடியை அவர் திறந்ததாக கூறப்படுகிறது.
இதில் எதிர்பாராத விதமாக கொதிகலனில் இருந்த கொதிநீர் சிந்தி ரபிக்முபின் மீது கொட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தொழிலாளி சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரபிக்முபின் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் மபிஜீதின்முமின் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.