

சென்னை,
தமிழ்நாட்டில் கோடைக்கால வெப்பம் காரணமாக ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி தரமற்ற அல்லது கலப்படமான பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க, ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்களில் தீவிர ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் குளிர்பானம் உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தவும், கோடை காலம் முழுவதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உற்பத்தியில் உணவுப் பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கவும், மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது தொடர்பாக சோதனை நடத்துவதோடு, புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.