

சென்னை,
தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சந்தால் பழங்குடியின மாநாட்டில் கலந்துகொள்ள வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் மந்திரிகள் யாரும் வரவேற்பு அளிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, நிகழ்ச்சிக்கான இடத்தை கடைசி நேரத்தில் சிறிய இடத்திற்கு மம்தா பானர்ஜி அரசு மாற்றியுள்ளது.
இது குறித்து ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதியை மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி திட்டமிட்டு அவமதித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஜனாதிபதி நாட்டின் தலைவர். முதல் குடிமகன். அவர் ஒரு மாநிலத்திற்கு வருகிறார் என்றால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதும், அவருக்கான மரியாதையை கொடுப்பதும் நாட்டில் 140 கோடி மக்களுக்கும் மரியாதை கொடுப்பதற்கு சமமானது. குடியரசு தலைவரின் வருகையை, அவரது நிகழ்ச்சியை அலட்சியமாக நடத்துவதும், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கான இடத்தை மாற்றி பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதும் 140 கோடி இந்திய மக்களையும் அவமதிக்கும் செயல் . ஜனாதிபதி என்பவர் அரசியல் சார்புடையவர் அல்ல. அவர் அரசியல் பேசவும் வரவில்லை. எனவே அவரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. இதற்காக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடமும், பழங்குடியின மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், மக்கள் தகுந்த தண்டனை வழங்குவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.