தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை
Published on

மதுரை,

நெல்லையைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் எஸ்.பி முத்துராமன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்படுகிறது. ரூ.119 கோடி செலவில் 6 மாடிகளுடன் கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமானப் பணிக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறவில்லை. சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் அரசு கட்டிடங்களை கட்டுவது விதிமீறலாகும். இதனால் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணி மேற்கொள்ளும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் கடந்த 23-ந் தேதி விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் கூறியதாவது, சுற்றுச்சூழல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசு அலுவலகம் கட்டுவதாக இருந்தாலும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவது விதிமீறல். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டப்படுவதால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணியை ஏன் நிறுத்தக்கூடாது?

இது குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவது விதிமீறல். நீதிமன்றம் உள்ளிட்ட எவ்வித கட்டுமானம் ஆனாலும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் உரிய அனுமதி பெறுவது அவசியம் என்றனர். மேலும், 4 வாரங்களில் உரிய அனுமதி பெற்ற பின்னர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளை தொடரலாம் என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com