ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல்; நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை

ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல்; நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
Published on

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 47). இவர் பூண்டி ஒன்றிய 4-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மற்றும் மதன்குமார் ஆகியோருக்கும் இடையே உள்ளாட்சி மன்ற தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இதனால் தேன்மொழி அந்த பகுதியில் வளர்ச்சி பணிகளை சரி வர செய்யவில்லை என்று கூறி வேல்முருகன் மற்றும் மதன்குமார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி பணி நிமித்தமாக ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வேல்முருகன் வழிமறித்து எங்கள் மீது புகார் செய்தால் உன்னை அழித்து விடுவேன் என்று தேன்மொழியை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து கடந்த 14-ந் தேதி மாலை தேன்மொழி பெரியபாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டுகணேஷ்குமார் விரைந்து வந்தார். புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழியிடம் உறுதி கூறினார். அதன் பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com