பண்டிகை காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தொடரும் சிக்கல்: டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி

பண்டிகை காலங்களில் சர்வர் முடக்கத்தைத் தவிர்க்க, சர்வர் திறனை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பண்டிகை காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தொடரும் சிக்கல்களால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

டிக்கெட் முன்பதிவு

விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி போன்ற தொடர் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்களின் வசதிக்காக இந்திய ரெயில்வே சார்பில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடும் சர்வர் பிரச்சினை

இந்த நிலையில், நேற்று காலை தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் குவிந்தனர். குறிப்பாக, ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11 மணி அளவில் தொடங்கியதும், ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் இணையதளத்தைப் பயன்படுத்த முயன்றனர்.

இதனால் ஏற்பட்ட கடும் சர்வர் பிரச்சினை காரணமாக காலை 11 மணி முதல் 11.20 மணி வரை இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை. பெரும்பாலான பயணிகளுக்கு "அதிகப்படியான நெரிசல் காரண மாக கோரிக்கையைச் செயல்படுத்த முடியவில்லை" என்ற செய்தி மட்டுமே திரையில் தோன்றியது. இதனால், 20 நிமிடங்களுக்கும் மேலாக பயணிகள் தங்களின் விபரங்களை உள்ளிடவோ, கட்டணம் செலுத்தவோ முடியாமல் தவித்தனர்.

பயணிகள் ஏமாற்றம்

இணையதளத்தில் ஏற்பட்ட சிக்கல் சரியாகி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள், பெரும்பாலான ரெயில்களில் தட்கல் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்றன. இதனால், நீண்ட நேரம் முன்பாகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரெயில் பயணிகள் கடும் ஏமாற்றமடைந்தனர்.

கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களின்போது, இந்த தட்கல் டிக்கெட்டில் இணையதளச் சிக்கல் என்பது தொடர்கதையாகி வருவதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற பண்டிகை காலங்களில் சர்வர் முடக்கத்தைத் தவிர்க்க, சர்வர் திறனை மேம்படுத்தி தடையற்ற டிக்கெட் முன்பதிவு வழங்க ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com