இரிடியம் மோசடி.. 30 பேரை கைது செய்து சிபிசிஐடி விசாரணை

ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
இந்திய ரிசர்வ் வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதால் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதாக பொய்யாக கூறி, தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்சகணக்கில் பணம் பெற்று, ஏமாற்றி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை தானாக முன்வந்து, தமிழ்நாடு முழுவதும் 13 வழக்குகளை பதிவு செய்து விசாரணை தொடங்கியது.
சேலம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை பிரிவில், பதியப்பட்ட முதல் வழக்கில் 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மேலும் 6 வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் மாபெரும் சோதனை மற்றும் தேடுதல் படலம் 12.09.2025ம் தேதி (நேற்று) நடைபெற்றது.
இந்த சோதனையின் போது தமிழ்நாட்டில் 43 இடங்களிலும், வெளி மாநிலங்களில் 4 இடங்களிலும் என மொத்தம் 47 இடங்களில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையை சேர்ந்த 10 காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 35 காவல் ஆய்வாளர்கள், 12 சார்பு ஆய்வாளர்கள் அடங்கிய குழு, சோதனையிட்டு 5 மோசடி கும்பல்களை சேர்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த சுவாமிநாத், காட்பாடியை சேர்ந்த ஜெயராஜ், குடுமியான்மலையை சேர்ந்த ஏசி ரவிச்சந்திரன், மணப்பாறையை சேர்ந்த ஞானப்பிரகாசம், திண்டுக்கல்லை சேர்ந்த டெய்சி ராணி உள்பட 30 குற்றவாளிகளை சிபிசிஐடி கைது செய்துள்ளது. குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றனர். புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.






