புழல் சிறையில் எரிவாயு சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு - விசாரணை நடத்த காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

புழல் சிறையில் எரிவாயு சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து காவல்துறை விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புழல் சிறையில் எரிவாயு சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு - விசாரணை நடத்த காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை புழல் சிறை துணை ஜெயிலர் சரண்யா என்பவரை பணியில் இருந்து விடுவித்து சிறைத்துறை டி.ஜி.பி. பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சரண்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறையில் எரிவாயு சிலிண்டர்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த முறைகேடு குறித்து கோவை சிறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்தி வருவதாகவும், சரண்யா பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சரண்யா தரப்பில், சிலிண்டர் முறைகேடு செய்பவர்களுக்கு இடையூறாக இருந்ததால் தனக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறையில் முறைகேடு நடந்துள்ளது மிகவும் தீவிரமானது எனவும், கோவை சிறை டி.ஐ.ஜி. தனது விசாரணையை முடித்து அதன் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிறைத்துறையினர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் புலன் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, சரண்யாவை பணியிலிருந்து விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com