

சென்னை
தி.மு.க. மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி., சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வு மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்துவது என்று தவறான வாதம் வைக்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழக மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். நீட் தேர்வு தரத்தை உயர்த்துவதற்காக இல்லை. இடஒதுக்கீட்டுக்கு எதிராக செய்யப்படுகின்ற ஒன்று.
தரத்தை உயர்த்துவதாக இருந்தால் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள் போல் எத்தனை மாநிலங்களில் உள்ளன. தரமான மருத்துவர்களை உருவாக்க கூடிய வசதிகள் மற்ற எத்தனை மாநிலங்களில் உள்ளன. நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரான, சமூகநீதிக்கு எதிரான ஒன்று. மாணவர்கள் நியாயமாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அதை நாம் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.