

சென்னை,
விவசாய பம்ப் செட்டுகளுக்கு தொடர்ந்து இலவச மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
24.07.2026 அன்று The New Indian Express நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள "Ground water depletion, cut in 18-hr free power supply deal blow to delta farmers" என்ற தலைப்பிலான செய்தியின் முதல் இரண்டு பத்திகளில், வேளாண் மின் பம்புகளுக்கான 18 மணி நேர இலவச மின் விநியோகம் இனிமேல் 14 மணி நேரமாகக் குறைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தி தொடர்பாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) சார்பில் தெரிவிக்கப்படுவதுயாதெனில், தமிழக விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்பட்டுவருகிறது.
மேலும், மின் கட்டமைப்பில் எதிர்பாராமல் ஏற்படும் தொழில்நுட்ப சவால்கள், அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணங்களினால் மட்டுமே ஒரு சில மணி நேரங்களுக்கு தற்காலிக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய தற்காலிக இடையூறுகளைத் தவிர, விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் வழங்கும் நடைமுறையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.