

சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை ஆலந்தூரில் கணவரை இழந்து தனியே வசித்து வந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அப்பகுதி தவெக வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தவெக எனும் ரீல்ஸ் கட்சியின் மீது விழுந்த மற்றொரு கரும்புள்ளி.
"வேலியே பயிரை மேய்ந்த" கதை போல, ஆட்சியில் இருக்கும் கட்சியின் நிர்வாகிகளே பெண்களை இப்படி சூறையாடினால், நம்பி வாக்களித்தவர்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? குற்றப் பின்னணி கொண்டவர்களை எல்லாம் அமைச்சர் பதவியில் அமர்த்திக் கொண்டு, தனது கட்சி நிர்வாகிகளுக்கு தவறு செய்வதற்கு முழு சுதந்திரம் கொடுப்பது தான் மாற்று அரசியலா?
ஏதோ ஒரு மாற்றம் வரும் என்று ஆசையில் தவெகவை தேர்ந்தெடுத்த தமிழக மக்கள், தற்போது தவறு செய்து விட்டோமோ என கொஞ்சம் கொஞ்சமாக உணருமளவிற்கு தவெகவினரின் அராஜகம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. எனவே, முதல்-அமைச்சர் விஜய் இனியும் தனது கட்சிக் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், கூடிய விரைவில் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.