

சென்னை,
திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி, மக்களிடையே பதற்றத்தைப் பரப்பி உள்ளது. வடமாநிலங்களைப் போல, தமிழகத்திலும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கி வருகிறதோ என்ற அய்யப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் மூன்று கொலைகள்; கொலை செய்ய, காஞ்சிபுரத்தில் கொலையாளிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒருவர் கொலை; பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயம்.
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத்துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய் விட்டன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, சுயவிளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முக்கிய கவனம் செலுத்துகிறாரா? என்று தெரிவித்துள்ளார்.