விஜயதசமியன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா? - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு

தமிழகத்தில் விஜயதசமி அன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விஜயதசமியன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா? - தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு
Published on

சென்னை,

கோவையை சேர்ந்தவர் ஆர்.பொன்னுசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதும், ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும், வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகிறது. அன்று தமிழக அரசு உத்தரவின்படி கோவில் திறக்காது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை திறக்க அரசு அனுமதிக்கிறது. ஆனால், துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அரசு பிடிவாதமாக செயல்படுகிறது. எனவே, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களைத் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இது அவசர வழக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராயிருந்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மத்திய அரசினுடைய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் கோவில்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மீதான விசாரணை பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com