துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா? - டி.டி.வி. தினகரன் கேள்வி

குறைவான விலையில் தரமான பருப்பு கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா? - குறைவான விலையில் தரமான பருப்பு கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் தமிழகத்திற்குத் துவரம்பருப்பு கிலோ ஒன்று ரூ 88.50க்கு வழங்க முன்வந்திருக்கும் பருப்பு நிறுவனங்கள் குஜராத்திற்கு ரூ.81க்கு வழங்குவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலத்திற்கு ரூ.81க்கு துவரம் பருப்பை வழங்கும் நிறுவனங்கள் தமிழகத்திற்கு மட்டும் அதே துவரம்பருப்பை அதைவிட கிலோ ஒன்றுக்கு ரூ.7.50 கூடுதலாக வைத்து ரூ.88.50க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

60 ஆயிரம் டன் அளவிற்கான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பருப்பு நிறுவனங்கள் கூறியிருக்கும் தொகைக்குப் பருப்பைக் கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு சுமார் 45 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பருப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி குஜராத் மாநிலத்திற்கு வழங்கும் அதே விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, தரமான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com