இயற்கையின் அரணாக விளங்கும் கொடைக்கானல் மலையை சிதைத்து கல் எடுப்பது வளர்ச்சியா? - வேல்முருகன் கேள்வி

கொடைக்கானல் மலையை பாதுகாப்பதில் அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்
வேல்முருகன்
Published on

சென்னை,

இயற்கையின் அரணாக விளங்கும் கொடைக்கானல் மலையைச் சிதைத்துக் கல் எடுப்பது வளர்ச்சியா? அல்லது அழிவுக்கான தொடக்கமா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

குவாரி பணி

கொடைக்கானல் மலைப்பகுதியில் பாறைகள் பெருமளவில் உடைக்கப்பட்டு கற்கள் எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குவாரி பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தால், அதன் எல்லை, காலக்கெடு, வெட்டியெடுக்கப்பட வேண்டிய கனிமத்தின் அளவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபந்தனைகள் ஆகியவை முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

உண்மை நிலை

அனுமதிக்கப்பட்ட பரப்பை தாண்டி பணிகள் நடைபெறுகின்றனவா? நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளனவா? இயற்கையான நில அமைப்பில் ஆபத்தான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? இவற்றின் உண்மை நிலையை அரசு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் எடுக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, மாநில அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல இடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

கேள்வி எழுகிறது

இந்நிலையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கொடைக்கானல் மலைத்தொடரில் அதிகாரிகளின் கண்காணிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கனமழை பெய்து நிலச்சரிவு அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகா நடவடிக்கை எடுக்க போகிறோம்? மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மிக அவசியம். இயற்கை சமநிலையை பாதிக்கும் திட்டங்கள் குறித்து முறையான அறிவியல் ஆய்வு நடத்தாமல் தொடர்ந்து அனுமதிப்பது, எதிர்காலத்தில் மீள முடியாத பேரிடரை உருவாக்கக்கூடும்.

அலட்சியம் காட்டக்கூடாது

தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடியாக கள ஆய்வு நடத்தி, அனுமதி ஆவணங்கள் மற்றும் குத்தகை நிபந்தனைகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பொறுப்பற்ற அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர் பாதுகாப்பை விட எந்த குவாரியும் முக்கியமல்ல. கொடைக்கானல் மலையை பாதுகாப்பதில் அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.

மலை வளத்தை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கான இயற்கைச் செல்வத்தை நிலைநிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com