அரசுப் பள்ளி மாணவர்களைப் பசியின் கோரப்பிடியில் சிக்க வைக்கத் துடிக்கிறதா திமுக அரசு? - நயினார் நாகேந்திரன்

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கம் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றொரு சான்று. ஊழியர் பற்றாக்குறையாலும், ஊழல் நிர்வாகத்தினாலும் தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவின் தரம் ஏற்கனவே மிக மோசமானதாக இருக்கும் நிலையில், பணியில் உள்ள சத்துணவு ஊழியர்களின் இப்போராட்டம் ஏழை, எளிய மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் எனத் தமிழகக் கல்வியமைப்பின் முக்கிய அச்சாணிகளைத் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தெருவில் இறங்கிப் போராடும் பரிதாப நிலைக்குத் தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு எனத் திமுக அரசு விளம்பர விழா எடுப்பதில் யாருக்கு என்ன லாபம்? திமுக அரசின் ஆணவத்திற்கும் அலட்சியத்திற்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை அடகுவைக்க வேண்டுமா?

எனவே, தமிழகப் பிள்ளைகள் தன்னை 'அப்பா' என்றழைக்க வேண்டுமென அத்தனை ஆசைப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பிள்ளைகள் பசியில் வாடுவதை வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடாது. சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து, நாளை முதல் தொடரவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முடித்து வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com