பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கே இந்த நிலையா – அண்ணாமலை குற்றச்சாட்டு

வாங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பொய் கூறக் கூச்சமாக இல்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், சுவர் இல்லை, கூரை இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை, வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி. இதுதான் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறையின் லட்சணம்.
திருச்சி மாவட்டம், பச்சை மலையில் உள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த பள்ளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, பழைய கட்டிடத்தை இடித்துள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
மகனின் ரசிகர்மன்ற தலைவருக்கு பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்திருந்தால், சினிமாத் துறை என்ற புதிய துறையை உருவாக்கி அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அமைச்சர் ஆக்கியிருக்க வேண்டியது தானே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். என் ஏரியா, உன் ஏரியா என்று திரைப்பட பாணியில் வசனங்கள் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி என்று நினைத்துக் கொண்டிருப்பவருக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.
பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 44,042 கோடி ரூபாய். எங்கே செல்கிறது இந்த நிதி? அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக 2021 தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.5,583 கோடி எங்கே போனது?
வாங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பொய் கூறக் கூச்சமாக இல்லையா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






