இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? உடனே செக் பண்ணுங்க
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் 2025-ல் துவக்கியது. இதற்காக நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்தது.
இதை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 2025 அக்டோபர் மாத நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில் 97.30 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது 5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் உள்ளனர். இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும் கடந்த 10-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெயர் சேர்க்க 22.8 லட்சம் மனுக்கள், பெயர் நீக்க 2 லட்சம், திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. அவற்றை பரிசீலித்து, இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள் இன்று பட்டியலை வெளியிட்டனர்.
இந்தநிலையில், இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? வாக்காளர்களை நீக்கும் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பிறகு 23-02-2026 இன்று பிற்பகல் 2:30 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
பெயர் உள்ளதா என்பதை http://voters.eci.gov.in http://electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி voter helpline app மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

