கோவையில் இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்

நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கோவையில் இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்
Published on

கோவை,

கோவையில் உள்ள இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கோவையில் நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக மாநகருக்குள் வாகனங்கள் வரக்கூடாது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக்நகர் ரவுண்டானா, பேரூர்பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் நால் ரோடு ரவுண்டானா வந்து செல்லலாம்.

வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக்நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் சோதனைச்சாவடி, சிவாலயா சந்திப்பு வழியாக இடதுபுறம் திரும்பி பேரூர் செல்ல வேண்டும்.

மருதமலை, தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்குவீதி வழியாக வாகனங்கள் வரக்கூடாது. அதற்கு பதிலாக காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி ரோடு, சிவாலயா சந்திப்பு, அசோக்நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

பொள்ளாச்சி, பாலக்காட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஒப்பணக்காரவீதியில் செல்லாமல், உக்கடம் நான்குவழி சந்திப்பை அடைந்து செல்ல வேண்டும். உக்கடத்தில் இருந்து ஒப்பணக்காரவீதி, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் வாகனங்கள் உக்கடம் 5 முக்கு சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்து மாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு ராமமூர்த்திசாலை, சொக்கம்புதூர், பொன்னய்யராஜபுரம், காந்திபார்க் வழியாக செல்லலாம்.

சுக்கிரவார்பேட்டையில் இருந்து, தியாகிகுமரன் வீதி வழியாக ராஜ வீதிக்கு செல்லக்கூடாது. கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வைர மாநகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கோவை மாநகர போலீஸ் அறிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com