தீவு பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி

தீவு பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சியை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
தீவு பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி
Published on

மண்டபம், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள போதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்தநிலையில் வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதை தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே மண்டபம் பகுதியில் நேற்று பகல் முழுவதுமே விட்டுவிட்டு மழை பெய்தது. சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. பலத்த மழை பெய்தபோது தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியான மனோலி தீவையொட்டிய கடல் பகுதியில், மேகம் கடல் நீரை உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. இந்த காட்சியை அந்த வழியாக அரசு பஸ் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் ராமேசுவரம், பாம்பன் பகுதியிலும் நேற்று பகல் முழுவதுமே விட்டுவிட்டு மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com