

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
”கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அமெரிக்க அரசின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற டொனோல்டு டிரம்ப், உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த எல்லை மீறி செயல்பட்டு வருகிறார். இன்று (28.02.2026) இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதலை தொடக்கியுள்ளது.
ஈரான் நாட்டின் அதிபர் கொமேனி அலுவலகம் அருகிலும், மற்ற முக்கிய பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஏற்கனவே பதற்றத்தில் உள்ள மத்திய கிழக்குப் பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் உருவான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவற்றை அர்த்தமிழக்க செய்ய, அமெரிக்க புதிய போட்டி அமைப்பை உருவாக்கியுள்ளது. இப்போது ஈரானின் பெரும் எண்ணிக்கையில் மக்களை கொன்றழிக்க தயங்க மாட்டோம் என்று ஆத்திரமூட்டும் தாக்குதலை நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் யுத்தவெறி செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
உலகப் போர் மூண்டு விடுமோ என்ற அச்சம் தீவிரமாக பரவி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்தவெறி உலக அமைதியை சீர்குலைத்து வரும் பேராபத்தை தடுக்க, இந்திய நாடு அதன் பாராம்பரிய அயலுறவுக் கொள்கை நிலையில் உறுதியாக நின்று உரத்துக் குரல் கொடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பிரதம அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.